விடாமல் அழுது கொண்டிருந்த ஐந்து மாத குழந்தையை பெற்ற தாயே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சில மாதங்களாகவே மனநலம் சார்ந்த பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டு இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், குழந்தையை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாமியார், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையின் தாய்க்கு மனநல பிரச்சனை இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என அவர் கூறியதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை அழுத காரணத்திற்காக பெற்ற தாயே குழந்தையை கொலை செய்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







