நாட்டில் 2025 ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் சேவை 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மேற்கு ஜானக்புரி மற்றும் தாவரவியல் பூங்கா வழிதடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் காணொலி மூலம் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் நாட்டின் முதல் மெட்ரோ தொடங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு எங்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன, இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025 க்குள், இந்த சேவையை 25 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
மேலும் மெட்ரோ சேவைகளின் விரிவாக்கத்திற்கு மேக் இன் இந்தியா மிகவும் முக்கியமானது. இது செலவைக் குறைக்கிறது, வெளிநாட்டு நாணயத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.







