சமூக பாதுகாப்பிற்காக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்றய நிலவரப்படி 96,513 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 7,819 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,54,948ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 12,970 ஆக உயிர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் பொதுமக்களுக்கு உள்ளதாகவும், அதை முறியடிக்கவே அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் தடுப்பூசியால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் நடிகர் விவேக் கூறினார்.







