பாகிஸ்தானின் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனரமைப்புக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அதிகளவில் உள்ளனர். இந்த நிலையில், அங்குள்ள ஐதராபாத்தில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் புனரமைப்புக்கு பின் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு கோவிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்களைக் கவனிக்கும் அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் அமீர் ஹஸ்மி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோவில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில், சியால்கோட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஷாவல தேஜா கோவிலும் அடங்கும் என்று கூறினார். அத்துடன் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளூர் இந்து அமைப்பு ஒன்றிடம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையினராக விளங்கும் இந்துக்கள் சுமார் 75 லட்சம் பேர் நாடு முழுவதும் இருப்பதாக அரசின் ஒரு புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







