மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே கட்டப்பட்ட கோயிலை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதிமுகவின் இரு பெரும் தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியில் மதுரை அருகே குன்னத்தூரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர், துணை முதல்வர் இருவரும் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கோயில் திறப்புக்காக வந்த முதல்வருக்கு 10 இடங்களில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 12 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு 7 அடி உயரத்தில் 400 கிலோ எடை கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. 11 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு 21 சிவாச்சாரியார்களுடன் 3 நாட்கள் யாக சாலை பூஜை நடைபெறுகிறது. 120 நபர்களுக்கு பசு மாடுகள் தானம் வழங்கப்பட்டது. அதேபோல் 234 நலிவுற்ற அதிமுக தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றுள்ளனர்.







