திருநெல்வேலி – தென்காசி இடையிலான வழித்தடத்தில் 121 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித் தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில் பாதை இல்லாததால் குறைவான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. எந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேகமாக பணிகள் நடத்தப்பட்டு இரட்டை ரயில் பாதி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக மின்மயமாக்கல் பணிகளுடன் தென் மாவட்ட ரயில் பாதைகள் பலப்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கவும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட திருநெல்வேலி – தென்காசி ரயில்வே வழித்தடத்தில் 2012ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது வரை 70 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இருப்பு பாதைகள் பலப்படுத்தப்பட்டு 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு ரயில்கள் இயங்கும் அளவுக்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 121 கிலோ மீட்டர் வேகத்தில் தென்காசி நோக்கி ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதன் மூலமாக திருநெல்வேலி தென்காசி ரயில்வே வழித்தடத்தில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுவதுடன் புதிய ரயில்கள் இயக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்றும் தாமிரபரணி என்ற பெயரில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.








