கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கல்லுக்குழி பகுதி மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக, கழிவுகள் கொடப்படும் பகுதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறினாலும், தங்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும், கழிவறை வசதியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். அப்போது பேசிய கமல்ஹாசன், நான் வாக்கு கேட்க வரவில்லை என்றும், உங்களின் குறைகளை தெரிந்துகொள்ளவே வந்ததாக கூறினார். நான் வெற்றி பெற்றதும் தொகுதி மக்களின் அடிப்படை வசதிகள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.







