திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சிலர், திருப்பதி தேவஸ்தான இணையதளத்தைப் போன்று, போலியான இணையதளத்தை உருவாக்கி, வீடு தேடி பிரசாதம் வரும் எனக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போலி இணையதளம் மூலமாக, பலர் பணத்தை இழந்ததையடுத்து, இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, போலி இணையதளங்கள் குறித்து போலீசில் புகாரளித்தனர். இந்நிலையில், ஏழு போலி இணையதள நிறுவனங்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது போன்ற போலி விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம், என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







