இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 14-ம் தேதி இலங்கை கடற்படையால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் 36 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர்பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.







