சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை, சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இதில் பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, ஸ்ரீதர் உட்பட 9 பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கடந்த மாதம், 9 பேருக்கும் 2 ஆயிரத்து 27 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக உளவுத்துறையினர் செயல்பட்டு, ஊடகத்தில் செய்தி வெளியாவதை தடுக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஏதுவாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் உறவினர்களும் ஊடகத்தினரிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.







