கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்தை முகாமை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று சொட்டு மருந்து போடாத குழந்தைகளுக்கு, அடுத்த 3 நாட்கள் வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடப்படும் என்றார். 70 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 65 லட்சம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து போடப்படும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி என்பது முக்கியமான மைல் கல் என குறிப்பிட்ட அவர், தடுப்பூசி தொடர்பாக பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இதுவரையும் எந்த தொற்றும் ஏற்படவில்லை என்று கூறிய அவர், இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவைதான் என தெரிவித்தார்.







