ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் என்ற செய்தி உண்மையல்ல என்று போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் என்ற பெயரில் ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர், ஓட்டுநர்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 1,000 செலுத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல. இதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழ்நாடு ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம், சென்னை-34 என்ற பெயரில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் நிவாரணத் தொகை ரூ.1000/- வழங்கப்பட இருப்பதாகவும், அதனைப் பெறுவதற்கு உரிய ஆவணங்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1000/- நிவாரணத் தொகை செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதுபோன்ற அறிவிப்பு எதுவும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை. இது தவறான தகவல் ஆகும் என இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுவதுடன் இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற தவறான தகவலை பரப்பும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.







