எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜகவின் வெற்றிக்கு காரணம் காங்கிரஸின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் பல இடங்களில் படுதோல்வியை சந்திதுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக தலைவர் கே.எஸ் அழகரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகத்தான் ஏற்கனவே 4 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் ஏற்கனவே பெற்ற வெற்றியை விட குறைவான எண்ணிக்கையில்தான் கிடைத்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் வகுப்புவாத சித்தாந்தத்தில் நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2024 யில் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மதசார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்து தேர்தல் களத்தில் எதிர்கொள்ள வியூகம் வகுத்தார். இதனால் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கிய படிப்பினையாகவும் இந்தப் படிப்பினையை சரியான புரிதலோடு ஏற்றுக்கொண்டு, லாபக் கணக்குப் போடாமல் இந்தியாவின் எதிர்கால நலன் கருதி எதிர்க் கட்சிகள் ஒன்றுபட்டு தமிழகத்தைப் போல் வியூகம் அமைக்க வேண்டும்.
மேலும், ராகுல் காந்தியின் தலைமையில் தான் பாஜகவின் பிரதமர் மோடியை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்பதன் மூலமே ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளின் தேசிய அளவிலான நோக்கங்கள் நிறைவேற முடியும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது









