இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தவிர அந்த மீனவர்களின் ஐந்து விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்ட 36 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பேருந்து நிலையம் முன்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், எதிர்வரும் காலங்களில் தமிழக மீனவர்கள் பிரச்சினை இன்றி மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







