சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ள புள்ளி விவரங்கள் தேவை என்றும் தமிழக அரசு கருதியது. இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்திருக்கிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஆறு மாத காலத்திற்குள் தனது அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும் எனவும் அந்த குழுவுக்கு தேவையான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் முதன்மைச் செயலாளர் இருப்பார் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது







