அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், கோவிந்தம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வீடு உட்பட தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்த தகவலறிந்ததும் கோவிந்தம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக சார்பில் தங்கமணி வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் 2 கோடியே 16 லட்ச ரூபாய் பணம், 1 கிலோ தங்கம் பறிமுதல் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி, என் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் எந்த ஒரு பொருளையும் எடுத்துச் செல்லவில்லை. என் வீட்டில் இருந்து செல்போன் மட்டுமே அவர்கள் எடுத்து சென்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது எனவும் என் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் எனவும் குற்றம் சாட்டினார்.
அதிமுகவை அழிக்கலாம் என நினைக்கின்றனர்; அது நடக்காது. அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதை குலைப்பதற்காகவே சோதனை நடத்தியுள்ளனர் என கூறினார். மேலும், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததாக வெளியான தகவல் தவறானது. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது;நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.