பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பன்னிரெண்டாவது படிக்கும் மாணவியுடன் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற இளைஞர் சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அவரது பெற்றோர் அவரிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்போது பேஸ்புக் மூலம் பழகிய இளங்கோ என்பவர் ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் மன உளைச்சலை ஏற்படுத்தியதை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகி மகள் பயந்துபோய் இருப்பதை அறிந்த தாய் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் அடிப்படையில் திருத்தணி காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் இளங்கோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்துள்ள இளங்கோ ஆந்திராவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மாணவியிடம் பேஸ்புக் மூலம் பேசி பாலியல் தொந்தரவு அளித்த செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







