கோவையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த தம்பதி தொழில் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு குடியேறியுள்ளனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சூழலில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் தங்களது மகளைக் காணவில்லை என்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், சிறுமிக்கும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டதும், ராமச்சந்திரன் சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துக்கொண்டு மதுரையில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற குனியமுத்தூர் போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டதுடன் ராமச்சந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.







