சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல டிவி நடிகர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி சீரியல் நடிகர் பேர்ல் வி. புரி (Pearl V Puri). ‘நாகினி’ தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரித்த போலீசார், நடிகர் பேர்ல் வி.புரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டீல் கூறும்போது, நடிகர் பேர்ல் வி.புரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் என்றார்.
இந்நிலையில் நடிகருக்கு ஆதாரவாக அவருடன் நடித்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’பேர்ல் வி புரியை நம்புகிறோம். உண்மை வெல்லும்’ என்று நடிகை கரீஷ்மா தன்னா தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உட்பட பலர் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.







