இந்தியா போன்ற நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி பொருளாதார இழப்பு, மக்கள் நலன் இரண்டுக்கும் ஒரு சமநிலையில் இருக்க வேண்டும் அதனால் தான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி என ஒவ்வொருவரின் கருத்து, பார்வை மற்றும் எண்ணங்களை முன்மொழிய கூறுகிறோம் என தெரிவித்தார். மேலும் இலசவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறு என கூறினார்.
தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியமில்லையா? இலவசத் திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பார்களா ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடும் போது, இலவசத் திட்ட அறிவிப்புகள் ஒரு சிக்கலான விவகாரம். இதை ஆராய போதுமான தகவல்கள் தேவை என வாதிட்டார்.
பின்னர் மத்திய அரசு தரப்பில் வாதிடும் போது, இலவச அறிவிப்புகள் வாயிலாகத்தான் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றால், நாம் பொருளாதார பேரழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறோம் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்தியா போன்ற நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என திட்டவட்டமாக உத்தரவிட்டது.
– இரா.நம்பிராஜன்








