நூல் விலை ஏற்றம், கட்டுப்படியாகாத கூலி, மின்சார கட்டண உயர்வு, புதிதாக தறி ஓட்ட ஆளில்லை என பல காரணங்களால் விசைத்தறி உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருப்பூர், கோவை மாவட்டத்தில் சீதோசன நிலை மற்றும் பருத்தி உற்பத்தி நூற்பாலைகள் என அனைத்து சாதகமான அம்சங்களும் இணைந்து விசைத்தறி தொழில் பிரதான தொழில் என்னும் நிலையை அடைந்தது. திருப்பூரில் பனியன் தொழில் பிரசித்தி பெறுவதற்கு முன்னரே விசைத்தறிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி கோலோச்சி வந்தது. பகல் இரவு என எந்நேரமும் விசைத் தறிகளில் சப்தம் கேட்காத இடங்கள் இல்லை எனும் அளவிற்கு வேகவேகமாக பரவிய விசைத்தறி தொழில் இன்று நலிவடைந்து தறிகளை உடைத்து எடைக்குப் போடும் அளவிற்கு மாற்றத்தை சந்தித்துள்ளது.
கூலி உயர்வு வழங்கப்படாமல் இருந்ததால் விசைத்தறிகளை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என ஆண்டின் துவக்கத்தில் இரண்டு மாதம் விசைத்தறிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூலி உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்டு மீண்டும் விசைத்தறிகளை இயக்கிய போது நூல் விலை உயர்வு காரணமாக மீண்டும் விசைத்தறி களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது மின் கட்டணம் உயர்வு விசைத்தறி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதிய வருமானம் இன்மையால் தவித்து வரும் விசைத்தறி உரிமையாளர்கள் பண நெருக்கடி காரணமாக தறியை விற்பனை செய்ய முயல்கின்றனர். ஆனால் அதிக உழைப்பை செலுத்த வேண்டிய விசைத்தறி தொழிலை செய்ய புதிதாக யாரும் முன்வருவதில்லை என கூறப்படுகிறது இதனால் தறியை வாங்க ஆள் இல்லாமல் உடைத்து எடைக்கு போடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அடுத்துள்ள கள்ள பாளையம் பகுதியில் 1 லட்சம் ரூபாய் விசைத்தறிகள் எடைக்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை உடைத்து உருக்காலைகளுக்கு அனுப்பி விடுவதாகவும் தெரிவிக்கின்றனர். கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் தனது விசைத்தறிகளை விற்பனை செய்துவிட்டு டிரைவர் வேலைக்கு சென்று விட்டதாக தெரிவித்தார்.
இந்த தொழிலில் உள்ளவர்களும் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அரசு தங்களுக்கு அளித்து வரும் சலுகை மின்கட்டணத்தை யாவது மீண்டும் கொடுத்து விசைத்தறி தொழிலை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.








