ஆளுநரை திரும்பப் பெற கடிதம் எழுதுவதால் பயனில்லை- ஆளுநர் தமிழிசை

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். புதுச்சேரி…

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற
உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை
என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் கடல் அரிப்பால் கடலையொட்டி வசிக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர், எனவே 60 கோடி ரூபாய் வரை கடல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்படி செயல்படுத்தப்பட்டால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு கடலோரம் வசிக்கும் மீனவ கிராமங்களில் பாதிப்பு தடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்ளு கடிதம் அனுப்பியுள்ளது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிர்கருத்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கூறுவது தேவையில்லாத ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த வித பயனும் இல்லை. நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் மழை காலங்களில்
தாழ்வான பகுதிகளில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.