கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்ற நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் தலைமையில், ஜன்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடர முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட, வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் இந்த கைது நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை ஆணையர் சுமன் நல்வா, கடந்த 38 நாட்களாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்துகொடுத்தோம் . மல்யுத்த வீரர்களின் நேற்றைய போராட்டத்தில் சட்டத்தை மீறியதால் கைது செய்து விடுவிக்கப்பட்டார்கள். தற்போது அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் போராட்டத்திற்கு விண்ணப்பித்தால் ஜந்தர் மந்தருக்கு பதிலாக வேறு இடத்தில் அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
https://twitter.com/DCPNewDelhi/status/1663045072064221185?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









