உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12 ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 1160 என்ற நிலையில் உள்ளது . எனவே யானைகள் தினத்தில் யானைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. இச்செய்திக்குறிப்பு பல்வேறு காரணங்களால் யானைகள் கொல்லப்பட்டுள்ளதையும், இந்தியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையையும் விவரிக்கிறது.
ரயில் மோதல் :
ரயில் மோதி கடந்த டிசம்பர் 31 2020 ஆம் ஆண்டு வரை,10 ஆண்டுகளில் 186 யானைகள் இறந்துள்ளன. இது அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 62 யானைகள் இறந்துள்ளன. தமிழ்நாட்டில் 5 யானைகள் இறந்துள்ளன.
மின்சாரம் தாக்கி இறத்தல்:
மின்சாரம் தாக்கி கடந்த டிசம்பர் 31 2020 ஆம் ஆண்டு வரை,10 ஆண்டுகளில் 741 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒரிசா மாநிலத்தில் யானைகள் 133 இறந்துள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 93 யானைகள் இறந்துள்ளன.
வேட்டையாடுவதில் இறப்பு:
வேட்டையாடப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 31 2020 ஆம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் 169 யானைகள் இறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக ஒரிசா மாநிலத்தில் 49 யானைகள் வேட்டையாடப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 9 யானைகள் வேட்டையாடப்பட்டு உள்ளன.
விஷம் வைத்து கொல்லுதல்:
விஷம் வைத்து கொல்லப்பட்ட யானைகளில் கடந்த டிசம்பர் 31 2020 ஆம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அஸ்ஸாம் மாநிலத்தில் 32 யானைகள் கொல்லப்பட்டுள்ளனர், தமிழ்நாட்டில் 1 யானை கொல்லப்பட்டுள்ளது.
யானைகள் கணக்கெடுப்பு:
யானைகள் கணக்கெடுப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது, இந்தியா முழுவதும் 29964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அசாம் மாநிலத்தில் 5719 யானைகளும், கேரளாவில் 5706 யானைகளும், தமிழ்நாட்டில் 2761 யானைகளும் உள்ளதாக அந்த கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் தமிழ்நாடு கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14612 யானைகள் உள்ளன. அசாம் அருணாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மண்டலத்தில் 10139 யானைகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகள் திட்டம் செலவீடு:
இந்தியா முழுவதும் யானைகளை பாதுகாப்பதற்காக யானைகள் திட்டம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 212.5 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. மற்றும் யானைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சமீப காலங்களில் யானைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினம் மனித இனம் அழிவுப் பாதைக்கு செல்லும். எனவே வருங்கால சந்ததியினருக்காக யானைகளையும், காடுகளையும் பாதுகாக்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, துரிதமாக செயல்பட்டு யானைகள் அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆல்வின் நியூஸ்7 தமிழ்







