தமிழக அரசு பனைமரம் சார்ந்த அனைத்து தொழில்களையும் விரிவுபடுத்தும் வகையில் பனை நல வாரியம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பனை மரங்களிலிருந்து பெறப்படும் மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய உபயோக பொருளான சுளவு தயாரிப்பு நலிவடைந்து வருவதால் தொழிலாளர்கள் வேதனை. தமிழர்களின் பாரம்பரியமிக்க பொருளாக பயன்படுத்தப்படும் சுளவு தயாரிப்பு நூற்றாண்டு காலத்திற்கு முன்னதாகும்.
அதன் மூலப் பொருட்களான பனை ஓலைகள், பனை மட்டைகளின் பற்றாக்குறையால் பாரம்பரிய இத்தொழில் அழிவின் விளிம்பை அடையும் நிலைக்கு வந்துள்ளது. ராதாபுரம் திசையன்விளை தாலுகா பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுளவு தயாரிப்பில் தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வந்தனர்.
தற்போது இரட்டை இலக்கமான 10 தொழிலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதற்கு சுளவிற்கான மூலப் பொருட்களின் பற்றாக்குறை முக்கிய காரணமாகிறது. மேலும் தொழிலாளர்களின் நலன் கருதி ஊக்கத்தொகை, மானியம் போன்ற உதவிகளை செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாமல் இருப்பது மற்றொரு காரணமாகும்.
இத்தொழிலை ஊக்குவிக்கும் விதமாக அரசு உதவிக்கரம் நீட்டினால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு பெறுவதுடன் பாரம்பரிய சுளவு தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருக்கும். தமிழகத்தில் சுதந்திர காலத்திற்கு முன்னதாக பெரும்பான்மையான கிராமங்களில் சுளவு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பனைமர தொழில் சார்ந்த விவசாயிகள் பதநீர், நுங்கு, கருப்பட்டி என வியாபாரம் நிமித்தமாக வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொண்டனர். அதேபோன்று பனைமரத்தின் வாயிலாக கிடைக்கப்பெற்ற ஓலைகளை பயன்படுத்தி நார்ப்பெட்டி, சுளவு போன்றவை தயாரிப்பும் கிராமப்புறங்கள் உட்பட ஒரு சில நகர்ப்புற பகுதிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றிருந்தது.
கடந்த கால் நூற்றாண்டுகள் வரையிலும் நெல் அறுவடையின் போது பதர் நெற்களை அகற்றவும், மண் துகள்களை நீக்கவும் சுளவின் பங்களிப்பு பெருமை கொண்டதாக இருந்தது. பிளாஸ்டிக் சுளவுகளின் விற்பனையாலும், அறுவடைக்கு இயந்திரங்களின் அறிமுகம் காலெடுத்து வைத்ததாலும் இவற்றின் செயல்பாடு தடுக்கப்பட்டும், தவிர்க்கப்பட்டும் வருகிறது.
30 சதவீதம் பிளாஸ்டிக் சுளவுகளும், 60 சதவீதம் நெல் அறுவடை இயந்திரங்களாலும் பாதிக்கப்பட்டு காலப்போக்கில் அரிதாக கண்டறிய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சுளவுகளில் எந்தவித பொருட்களை வைத்தாலும் கெட்டுப் போகாது. சுளவுகளை பயன்படுத்துவதனால் கேடு ஏற்படாது.
தற்போது சுளவு தயாரிப்பு கிராமப்புறங்களில் மட்டுமே என்றிருந்தாலும் நலிவு நிலையை அடைந்துள்ளது. ஒரு சில கிராமப்புறங்களைச் சார்ந்த பகுதிகளை கொண்டுள்ள திசையன் விளை, பணகுடி,வள்ளியூர்,ராதாபுரம் வட்டார பகுதிகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.
இதற்கான மூலப் பொருட்கள் ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் மட்டுமே தேவைக்கேற்ப ஓரளவு கிடைத்து வருவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சாதாரண சுளவு சிறிய மற்றும் பெரிய அளவிலும் அதே போன்ற அளவில் வட்ட வடிவம் கொண்ட சுளவுகளும் உற்பத்தியில் இருக்கிறது. நாளொன்றுக்கு ஒரு நபரால் அதிகபட்சம் 6 சுளவுகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.
இந்தச் சுளவுகள் 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. சேலம் உட்பட பிற மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் சுளவுகளுக்கு இன்னமும் கிராக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது என்பதால் அப்பகுதிகளுக்கு மட்டுமே அனுப்புவதை உற்பத்தியாளர்கள் இன்றளவும் நடைமுறையில் வைத்திருக்கின்றனர்.
சுய தொழிலாக இருப்பதால் இத்தொழிலை கைவிடாமல் பாரம்பரியமாக ஆண் பெண் என இருபாலாறும் ஈடுபடுவதுண்டு. எனினும் மூலப் பொருட்களின் பற்றாக்குறையால் சுளவு உற்பத்தியில் கடும் பின்னடைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பனைமர தொழிலை பாதுகாக்கும் பொருட்டு அரசு தரப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் தொழில் சார்ந்த விவசாயிகளும், அதன் மூலப் பொருட்களை பயன்படுத்தி சுளவு, நார்ப் பெட்டி, ஓலைப்பாய் என உற்பத்தி மீண்டும் தலை தூக்கும். இத்தொழிலை ஊக்கப்படுத்த, மானியம் உட்பட்ட சலுகைகளை விவசாயிகளுக்கும் அதைச் சார்ந்த உபயோக பொருட்களின் உற்பத்தி தொழிலாளர்களுக்கும் உதவிக்கரம் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரசின் தரப்பில் சுளவுகளை கொள்முதல் செய்து விற்பனையை மேம்படுத்தவும், தொழிலை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருப்பது இன்றியமையாதது. இதற்கென தமிழக அரசு பனைமரம் சார்ந்த அனைத்து தொழில்களையும் விரிவுபடுத்தும் வகையில் பனை நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் இமாலய எதிர்பார்ப்பாகும்.







