சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, கார் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், டிஎஸ்பி-யின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் குமரன். இவர் தனது குடும்பத்துடன் மதுரவாயல் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை டி.எஸ்.பி குமரனின் மகன் லோகேஷ் தனது தாயை ஊருக்கு அனுப்புவதற்காக, தனது தந்தையின் அரசு வாகனத்தில் தாயுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்று இறக்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, அண்ணா சதுக்கம் போலீசார், அரசு வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டி.எஸ்.பியின் மகனும், கல்லூரி மாணவருமான லோகேஷை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விபத்தில் சிக்கிய அந்த பெண் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அமிர்தா(30) என்பதும், பெருங்குடியில் தனியார் வங்கியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நேற்று அதிகாலை அமிர்தா வெளியே சென்றுவிட்டு வரும் போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்தா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தை ஏற்படுத்திய டி.எஸ்.பி மகன் லோகேஷ் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அரசு வாகனத்தை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியதற்காக டி.எஸ்.பி குமரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயரதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.