’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும் எனவும், அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள…

ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும் எனவும், அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பரத சமர்ப்பணம்
நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “கனடாவில் நான் படிக்கும்போது அங்கு தமிழ் கடவுள்களின் கோயில்கள் நிறைய அமைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். வெளிநாடு சென்று படிக்கும்போதுதான் நம் நாட்டின் பெருமை நமக்கு தெரியும். எனக்கு கோயிலை பிடித்திருக்கிறது. நான் கோயிலுக்கு போகிறேன் என்றால் இங்கு முத்திரை குத்தி விடுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் நம் நாட்டின் முத்திரையை
வெளிநாட்டவர் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும். அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருகிறேன். தாயார் இறந்தால் கூட இன்று ஒரு நொடி, ஒரு நிகழ்வை கூட ரத்து செய்யாமல் நாடுதான் முக்கியம் என்று உள்ள பிரதமரை பெற்று இருக்கிறோம். தாய் முக்கியம், தாய்நாடு முக்கியம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நாடு நாடாக சென்றதால் தான் G20 மாநாட்டிற்கு இந்தியா இன்று தலைமை தாங்குகிறது. G20 மாநாட்டில் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்றது தான் காரணம். வளர்ந்து வரும் நாடு இந்தியா என்ற நிலை மாறி, பிரம்மாண்ட வளர்ச்சி பெறும் நாடாக வெளிநாட்டவர் சொல்லும் அளவிற்கு இன்று இந்தியா விளங்குகிறது.

கலாச்சாரத்தை எடுத்து உரைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நம் கலாச்சாரங்கள் நம் அடையாளங்கள் மறைக்கப்பட்டு பல வேலைகளில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையோடு நம்பிக்கையில் பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.