அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கைது செய்யப்பட்ட வழக்கில், கைதான சில மணி நேரத்திலேயே உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
பிப்ரவரி 17 அன்று அதானி-ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மோடிக்கு எதிராக அவதூறு பரப்புவதாக
கூறி, பாஜக கட்சியை சேர்ந்த பலர் லக்னோ, வாரணாசி மற்றும் அசாமில் உள்ள காவல் நிலையங்களில் பவன் கேராவிற்கு எதிராக வழக்கு தொடுத்து எப்ஐஆரும் பதிவு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சத்தீஸ்கரில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்த பவன் கேரா, இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்த
சமயத்தில், அவரை கைது செய்வதற்காக அசாம் போலீசார் விமான நிலையம் வந்தனர். மேலும் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகளிடம் எப்ஐஆர் தகவலை காண்பித்பித்த அவர்கள், தொடர்ந்து போலீசார் கேட்டுக் கொண்டதால், பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு, பிறகு அவரை போலீசார் கைதும் செய்தனர்.
இதனையடுத்து, பவன் கேராவுடன் சத்தீஸ்கர் செல்லவிருந்த காங்கிரசார், விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தது. இந்த மனுவை இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரித்த உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் பல இடங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதால், அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா