சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சிறுமியின் செயல், அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாதவரம் அடுத்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் 7 வயது மகள் ஜனனி, சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் வழங்கிய பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில், பலத்த மழையால் பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய உணவுக்கு அருகில் இருப்பவர்கள் அவதிப்படுவதை கண்டு அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.
தொடர் கனமழையால், சாக்கடை கழிவு நீரோடு மழை நீரும் சேர்ந்து முழங்கால் அளவு தேங்கி இன்னும் வடியாமல் இருக்கும் புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளான பால், பிரட் கொடுக்க விரும்பி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சைக்கிள் வாங்க வைத்திருந்த 5 ஆயிரம் பணத்தில் பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட் வாங்கி மீட்பு படை உதவியுடன் படகில் சென்று விநியோகித்துள்ளார்.
தொடர்து பெற்றோர் உதவியுடனும், சமூக ஆர்வலர்கள் உதவியுடனும் பணம் சேகரித்து தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்ய இருப்ப தாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.







