இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 227 ரன்களை குவித்துள்ளது. இதனால் 228 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ஆனால் அடுத்ததாக களமிறங்கிய டி காக் மற்றும் ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினர். 4 ரன்களும், 6 ரன்களுமாக விளாசி அடித்து நொறுக்கினார்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ரைலீ ரூசோ 48 பந்தில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தென்னாப்பிரிக்காவின் அதிரடியான ஆட்டத்தால் அந்த அணி 227 ரன்களை குவித்தது. இதையடுத்து 228 என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
– இரா.நம்பிராஜன்








