போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை.!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தி தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தி தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை பென்சனுடன் சேர்த்து வழங்க வேண்டும். புதிய தொழிலாளர்களை பழைய பென்சன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாததாலும் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியதாலும்,  பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு சிஐடியு அமைப்பு  முற்றுகை போராட்டம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து  2 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளார்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.  பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜன.19ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு,  சென்னை உயர் நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்த நிலையில் போராட்டம் நடத்த ஊழியர்களுக்கு முழு உரிமை உள்ளது ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்த பின் போராட்டத்தை தொடரலாமே? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  மேலும் ஜனவரி 11 முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்த போராட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.