ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பயனாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அப்பதவியில் எலான் மஸ்க் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவர் ட்விட்டரை வாங்கிய தினமே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார். தொடர்ந்து புளூ டிக் அக்கவுண்டிற்கு மாதம் ரூ.660 கட்டணம் வசூலிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை அன்று உலகின் சில முக்கியமான செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகளை எலான் மஸ்க் முடக்கினார். பிற சமூக வலைதளங்களின் பதிவுகளை ட்விட்டரில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறுபதிவி செய்வதற்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அது போன்ற கணக்குகளை முடக்க போவதாக தெரிவித்தார்.
https://twitter.com/elonmusk/status/1604617643973124097
இந்நிலையில், தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என ட்வீட் செய்து ட்விட்டர் பயனாளர்கள் கருத்து தெரிவிக்குமாறு கூறியிருந்தார். இதற்கு 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், 42.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் அப்பதவியில் நீடிக்க வேண்டும் எனவும் பதில் அளித்துள்ளனர். இதனால் அவர் தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிப்பாரா? அல்லது வேறு ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவாரா என தெரியவில்லை.







