உலக கோப்பை டி20 போட்டியில் ஷிகர் தாவன் இந்திய அணியில் இடம் பெறுவது கடினம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி டி20 உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி பாகிஸ்தானை அக்டோபர் 23ல் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் உலக டி20 போட்டி குறித்து சமீபத்தில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அதிலும் அவர் இடம் பெறவில்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவர் இடம் பெறுவது கடினம். என்னைப் பொறுத்தமட்டில் டி20 உலக கோப்பையில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான் ஏற்கனவே 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த டி20 உலக கோப்பையில் இடம்பெற்றிருந்தார். நடந்து முடிந்த ஐபில் போட்டியிலும் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த போட்டிகளில் ஷிகர் தவான் இடம்பெறுவார் என்று எதிர்பாத்த நிலையில், புதிய ஆட்டக்காரர்களான ருத்ராஜ் கெய்வாட், இஷான் கிஷான் மற்றும் கே.எல். ராகுல் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








