“விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்”-தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்.…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அவர் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. அவருடைய குடும்பத்தினரே கட்சிப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

ஜூன் 14ஆம் தேதி விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேமுதிக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவுப் பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நம்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.