பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி, விராலிமலை, மணப்பாறை, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து 21 பேர் கொண்ட வேட்டையாடக்கூடிய குழு ஒன்று வேட்டை நாய்கள், கருவிகளுடன் பெரம்பலூர் அருகே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் அவர்கள் சிறுவாச்சூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து அவர்களை பிடிக்க வனத்துறையினர் முடிவு எடுத்தனர். பின்னர் அந்த கும்பல் எங்கு சுற்றிதிரிகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடினர்.
பின்னர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள் அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் சிலம்பரசன் வீரராகன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி சென்று அவர்களை பிடித்தனர். மேலும், அவர்களை அழைத்து வந்த வேட்டை நாய்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து வந்து வனப்பாதுகாப்பு சட்ட அடிப்படையில் அவர்களிடம் அபராதம் விதித்ததோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்