அதிமுக சிறுபான்மையினர் நலப்பரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கட்சியின் கொள்கைக்கும், குறிக்கோள்களுக்கும் முரணாக செயல்பட்டதாக கூறி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் ஒபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் சில கருத்துகளை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியை அவர் ஒருமையில் பேசும் ஆடியோ பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் அவர் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.








