ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலியாக 12 நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விமான நிலைய இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, பங்களாதேஷ், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் வரும்வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தங்க வைக்க வேண்டும் எனவும், தொற்று இல்லை என உறுதியான பின்னர் அவர்களது வீடுகளில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஏழாம் நாள் முடிவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதிலும் தொற்றில்லை என முடிவு வந்த பின்னரும் மீண்டும் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவுறுத்தலின்படி இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியுள்ளார்.








