நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை எனவும் இந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு எதிரானவர்கள் என ஆ.ராசா பேசியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் திமுக இலக்கிய அணி சார்பில் முப்பெரும் விழா மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,ராஜ கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன என்பதை நான் சொல்ல தேவையில்லை. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் இன்று கோர்ட்டில் நிற்கின்றார்கள். சமதர்மத்தை நாட்டிலே நிறுவுவதற்கு பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். இனிமேல் பொதுக்கூட்டம் நடத்தினால் கழக வரலாறை பேச வேண்டும். இன்று உள்ள தமிழனிடம் சொரணை போய்விட்டது. ஆ ராசா பேசியதை மிகப்பெரிய குற்றம் என ஒரு கூட்டம் எதிர்க்கிறது. ராசாவின் பேச்சை எந்த பிராமிணரும் எதிர்க்கவில்லை, யாருக்காக இத்தனை ஆண்டுகாலம் போராடினோமோ அவர்கள் தான் எதிர்க்கிறார்கள்.
இன்று இளைய சமுதாயத்தினரிடம் பெரியாரிசம் தலை தூக்குகிறது, இது நாட்டுக்கு ஒரு ஆரோக்கியமான போக்கு எனக் கூறினார். அதே போல் பள்ளி மாணவர்களிடையே ஆர்.எஸ்எஸ் ன் பயிற்சி தொடங்க ஆரம்பித்து விட்டது இந்த போக்கு நீடித்தால் தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றி விடுவார்கள் எனப் பேசினார். 
இதனையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்று எல்லோருக்கும் தெரியும். திராவிடக் கொள்கையை கொண்டு சேர்ப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது, ஏன் கருப்புசட்டை போட்ட எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அவர் திராவிட மாடல் ஆட்சிதான் செய்கிறார் என்றார். மேலும் சாராயம் குடிப்பது தப்பில்லை குடிப்பவன் கெட்டவன் இல்லை என்ற அவர் ஒரு லட்சியத்திற்காக நல்லவனாக இருக்க வேண்டும் என்றார். கார்ல் மார்க்ஸ் சாராயம் குடிப்பார் அவரை குடிகாரர் என்று கூற முடியுமா? அவரின் ததத்துவத்தை தான் நாம் பார்க்க வேண்டும் என்றார்.
பெரியார் திடலில் முதல்வர் பேசினாலும் ஆ ராசா பேசினாலும் விமர்சனம் செய்கிறார்கள்.தற்போது என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகிறவன் மனிதனே இல்லை. ஆனால் நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்டார். இந்துக்கள் இரண்டுவகை ஒன்று சனாதனத்தை பின்பற்றுபவர்கள் மற்றொன்று அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றுபவர்கள். ஆளுநர் பதவி ஏற்கும் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆளுநராக பதவியேற்றார்.
தி.மு.க இலக்கிய அணி மற்றும் நிகிதா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் @mkstalin தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூல்களை வெளியீட்டு சிறப்புரையாற்றியபோது https://t.co/HM5ETstma0
— A RAJA (@dmk_raja) September 19, 2022
அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரவி ஏன் சனாதனம் பேசுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சனாதன தர்மத்தை பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். சனாதனம் தர்மம் என்பது வேதத்தின் அடிப்படையிலும்,புனித புத்தகங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்றும் ஆரியர்களாலும்,ஆரிய மரபினத்தவரால் கொண்டுவரப்பட்டது என ஆ ராசா பேசினார்.








