நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. இந்தி, தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மேலும், அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் இடையிலான பிரச்னையில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கேஜிஎப்-2 படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சுதீப், இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் இந்தியா திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றி பெற போராடுகின்றனர். நாங்கள் அனைத்து இடங்களிலும் வெல்கிறோம் என்றார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், இந்தி இனி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப்பிங் செய்கிறீர்கள். இந்திதான் எப்பொழுதுமே நம் தாய்மொழி. இந்தி தேசிய மொழியாக இருந்துள்ளது. எப்போதும் இருக்கும் என கூறியிருந்தார். அஜய் தேவ்கானின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே “தாகத்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பேசுகையில், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியா மொழி வாரியாக வேற்றுமையுடன் உள்ளது. அனைவரையும் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவைப்படுகிறது. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால், தமிழ் அதைவிட பழமையானது. சமஸ்கிருதம் அனைத்திலும் பழமையானது.
கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தியைவிட சமஸ்கிருதம் மிகவும் பழமையானது. சமஸ்கிருதத்தில் இருந்து கூட இந்த மொழிகள் உருவாகி இருக்கலாம். நம் நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் ஏன் இருக்கக் கூடாது. தேசிய மொழி சமஸ்கிருதம் என்று நான் நினைக்கிறேன்.
அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் இடையிலான பிரச்னையில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன் என்றார்.