அகழாய்வு தொடங்கி 30 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? – நீதிபதிகள் கேள்வி

ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன்…

ராமநாதபுரத்தில் உள்ள அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என தமிழக அகழாய்வுத்துறையிடம்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் கிராமம், வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம் கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தில் 1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 ஆகிய வருடங்களில் அகழாய்வு நடைபெற்று உள்ளது. அந்த அகழ்வாய்வில் பல பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் பிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாணயங்கள், ரோமர்களுடனான வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருட்களை, கார்பன் டேட்டிங் முறை மூலம் சோதனை செய்ததில் கிமு 345, கிமு 268, கிமு 232 வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரிய வருகிறது. இதன்மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனவே, அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருள்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், பல்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அகழாய்வுத்துறை தரப்பில், அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடர்பாக முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு குறித்த அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அகழாய்வு துறை செயலர், தமிழ்நாடு அகழாய்வுத்துறை
ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.