“கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

சட்டம் ஒழுங்கு சீரழிந்து கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கோவையில் ‘அரபுக் கல்லூரி’ என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக நால்வர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என திமுக அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : தவெக மருத்துவர் அணி நிர்வாகிகள் நியமனம்… விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோயில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.