சீனாவில் கனமழை : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

சீனாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் 22 கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 4,855 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. மழை, வெள்ளம் உள்ளிட்ட சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 331 பேர்காயமடைந்துள்ளனர்.

மேலும் 400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கன்சு மாகாணத்தில் உள்ள லாங்னான் நகரில் நான்ஹே டவுன்ஷிப்பகுதியில் நேற்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அங்கு இருந்த சுமார் 33 பேர் மண், இடிபாடுகளில் புதைந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் இருந்து 21 பேரை மீட்டனர். ஆனால் அவர்களில் ஐந்து பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 12 பேரை கண்டறிவதற்காக தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் சீனாவில் இதுவரை, மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.