பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அதனை நாடாளு மன்றத்தில் தெரிவிக்க அரசு அஞ்சுவது ஏன்? என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 16 நாட்களில் நேற்றைய தினம் பிற்பகல் மட்டுமே மக்களவை நடைபெற்றது. மற்ற நாட்களில் பெகாசஸ், வேளாண் சட்டம், கொரோனா, மேகதாது விவகாரம், பெட்ரோல், டீசல் விலை தொடர்பான விவாதம் நடத்த கோரி நோட்டீஸ் அளித்தும் நிராகரிக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவை இன்று நிறைவடைந்துள்ளது. மாநிலங்களவை இன்று மாலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியபடி 3 வேளாண் சட்டம், விலைவாசி ஏற்றம், மேகதாது பிரச்சனை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப, தினமும் நோட்டீஸ் வழங்கினோம். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, 16 நாட்களும் மக்கள் சார்பாகவே நாடாளு மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் பதில் அளிக்க அரசு மறுத்தது.
இந்த மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்க வில்லை. பெகாசஸ் உளவு விவகாரம் இந்த கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சினையாக எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தேவையா? என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். இந்த கூட்டத்தொடரில் 2 நாட்கள் மட்டுமே பிரதமர் நாடாளுமன்றம் வந்துள்ளார்.
14 எதிர்க்கட்சிகள் இம்முறை ஒருங்கிணைந்து செயல்பட்டன. நாடாளுமன்ற ஜனநாயகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அது முடங்க அரசுதான் காரணம். பெகாசஸ் விவகாரத்தில் அரசுக்கு சம்பந்தம் இல்லை என்றால் அதனை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க அரசு அஞ்சுவது ஏன்?
ஜனநாயக கடமையை எதிர்க்கட்சிகள் சரியாக ஆற்றுவதற்கு ஓ.பி.சி மசோதாவில் அனைத்து கட்சிகளும் நேற்று ஒருமித்து ஆதரவு அளித்ததே சாட்சி. ஒ.பி.சி உரிமை விவகா ரத்தில் ஒன்றிய அரசோ, பிரதமரோ உரிமை கோர முடியாது. 2018 ஆம் ஆண்டு அவர்கள் கொண்டுவந்த மசோதா மூலமாகவே மாநில உரிமை பறிபோனது. மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சிகளின் கோரிக்கை காரணமாகவே மாநிலங்களுக்கு மீண்டும் உரிமை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.









