பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சச்சினை பிடிக்க சென்றபோது நாட்டுவெடி குண்டு வீசியும், கத்தியால் காவலரை தாக்கியதாலே துப்பாக்கியால் சுட்டு ரவுடியை
பிடித்ததாக காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருமையூர்
பகுதியை சேர்ந்தவர் சச்சின் (28), பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை
முயற்சி, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சோமங்கலம் போலீசாரால் தேடப்பட்டு வந்த சச்சின், சாய்ராம் கல்லூரி சாலையில் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சோமங்கலம் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க முற்பட்டனர்.
அப்போது ரவுடி சச்சின் நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி தப்பிக்க முயன்றார். மேலும் பாஸ்கர் என்ற காவலர் அவரை தொடர்ந்து துரத்திப் பிடிக்க முயன்றபோது இடது
தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார்.
போலீசார் சரணடைய சொல்லியும் கேட்காமல் தாக்கி விட்டு தப்பிப்பதில் குறியாக
இருந்தார். உடனடியாக தற்காப்பிற்காக ஆய்வாளர் சிவகுமார் 9 எம்.எம்.
துப்பாக்கியால் முட்டிக்கு மேல் 5 முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் காலில்
பாய்ந்தது.
சச்சினுடன் மோட்டார் சைக்கிளில் வந்த பரத் என்ற நபர் தப்பியோடி விட்டார்.
சச்சினையும், காவலரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து
சென்று மேல் சிகிச்சைகாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த காவலர் பாஸ்கர் குரோம்பேட்டை மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் , மற்றும் துணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி, உதவி ஆணையர் சினிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவமனை டீன் பழனிவேலிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து, சம்பவம் நடந்த சாய்ராம் கல்லூரி சாலையில் காவல் ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டர். பின்னர் சோமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இன்று விடியற்காலை 3 மணியளவில் குற்றவாளிகள் திடுட்டு வண்டியில் வருவதாக
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது குற்றவாளிகள் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொன்னபோது நிறுத்த மறுத்துவிட்டனர்.
மேலும் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்த முயன்றனர். மேலும் அப்போது காவலர் பாஸ்கர் அவரை மடிக்கி பிடிக்க முயன்றபோது பாஸ்கர் மீது
கத்தியால் குத்தினர்.
அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் சுட்டு ஒருவரை
பிடித்தார். மற்றொருவர் பரத் தப்பி ஓடிவிட்டார். 5 குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இதில் 2 குண்டுகள் சச்சின் காலில் பாய்ந்தது.
கொலை, கொள்ளை , நிறுவனங்களில் மிரட்டி பணம் பெறுவதை தடுக்க தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது. ரவுடி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என தெரிய வந்தது. அவரிடமிருந்து கத்தி, இரண்டு நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது மருத்துவமனையில் இருப்பதால் சிகிச்சை முடிந்ததும் விரிவான விசாரணை
மேற்கொள்ளப்படும் என்று அமல்ராஜ் தெரிவித்தார்.








