கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையா சிறப்பு விமான மூலம் இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு செல்கிறார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2,615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியே, 135 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியை பிடிப்பதில் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று இரு தலைவர்களின் வீடுகளின் முன்பு அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு போஸ்டர்களை ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவர் முதலமைச்சர் வேட்பாளராக ஆக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இறுதியாக கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் முடிவு செய்யும் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்து பேச உள்ளார். அதற்காக இன்னும் சற்று நேரத்தில் கர்நாடகாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி விரைகிறார்.
- பி.ஜேம்ஸ் லிசா









