ஸ்ரீ பெரும்புதூரில் மர்மான முறையில் பெண் இறந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. பெண்ணை கொலை செய்தது தான் தான் என இளைஞர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தென்புஷ்கரணி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (34). இவர் அண்மையில் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைப் பார்த்த அவரது கணவர், ஸ்ரீபெரும்புதுார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் புஷ்பாவின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உடலில் காயங்கள் அதிகமாக உள்ளதால் புஷ்பா படுகொலை செய்யப்பட்டு, துாக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வழக்கில் புதிய திருப்பமாக திருவள்ளூர் மாவட்டம், ராமாபுரம் பகுதியை சேர்ந்த யோபு (28) என்ற இளைஞர் திருவள்ளூர், மணவாளநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த யோபுவை போலீசார் ஸ்ரீபெரும்புதுார் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் புஷ்பாவிற்கும், யோபுவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. யோபுவிற்கு திருமணம் நடக்க இருப்பதால் புஷ்பாவிடம் விலகி இருந்துள்ளார்.
இருவரும் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த யோபு, புஷ்பாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே புஷ்பா உயிரிழந்தார். இதனையடுத்து புஷ்பாவை துாக்கில் தொங்கவிட்டு யோபு தப்பி சென்றுள்ளார். மேலும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.