29.8 C
Chennai
June 7, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

“பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை
உருவாக்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற மண்டல அளவிலான மாநாடு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று
நடைபெற்றது. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை,
திருவாரூர், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளியில் பயிலும்
மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த மாநாட்டில் பாடநூல் கழக தலைவர் லியோனி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

இதனிடையே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சாதனை காட்சி அரங்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறினார்.

அந்த அரங்குகளில் இருந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் படைத்த சாதனைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் விளக்கி கூறினர்.

அதன்படி மன்னை தூய வளனார் பெண்கள் அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜெபமாலை மற்றும் கல்வி அதிகாரிகள் அமைச்சரிடம் பள்ளி மாணவர்கள் சாதனைகளை விளக்கி கூறினர். அப்போது மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

இதனை அடுத்து காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் கீழ் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும்,
வானவில் மன்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழ்நாடு பள்ளி கல்வி துறை தான் முதன்மையான பள்ளி கல்வி துறையாக இருக்கிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி கல்வி துறையில் மட்டும் 57 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் போது சிறந்த சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும் என்றார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நம் நாட்டில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள கூட்டுறவு வேறு எங்கும் இல்லாத உறவு. முதலமைச்சர் தன்னை ஒரு மாணவனாக, ஆசிரியராக, பெற்றோராக நினைத்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வருகிறார். காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு
வரப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அத்தி பூத்தாற் போலவே மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே சேர்ந்தார்கள்.

அதிக எண்ணிக்கையில் சேர்க்க உரிய நடவடிக்கை வேண்டும் என முதலமைச்சர்
அறிவுறுத்தினார் அதன்படி எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஒரு ஆண்டில்
மட்டும் 274 அரசு பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி, சட்ட பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்
கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள்.

அரசு பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், தொடக்கப்பள்ளிகளில்
ஸ்மார்ட் வகுப்பறை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் – பெற்றோர்களுக்கும் கூட்டு
பொறுப்பாக இருக்க வேண்டும். நீங்கள் எங்களை நம்புகின்றீர்கள். நாங்கள் உங்களை நம்புகின்றோம். தி.மு.க அரசு பொறுப்பேற்று 32 மாதத்தில் பள்ளி கல்வி துறையில் மட்டும் 57 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நல்ல கட்டமைப்பை பெற்றுள்ள பள்ளி கல்வி துறையாக தமிழ்நாட்டின் பள்ளி கல்வி துறை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார்.

முன்னதாக அரசு பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பெற்றோர்கள் சீர் வழங்கினர். மேலும் 7 மாவட்டங்களில் இருந்து அரசு
பள்ளிகளுக்கு ரூ.246.49 கோடி நன்கொடையாளர்கள் மூலம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அந்த நன்கொடையாளர்களுக்கு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading