தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?-உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க உத்தரவிடக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தொடரப்பட்ட மனு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான…

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க உத்தரவிடக் கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தொடரப்பட்ட மனு நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.

“இந்த விவகாரம் தொடர்பாக ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக உரிய துறையிடம்  விளக்கம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வேண்டும்” என்று மத்திய அரசு தெரிவித்தது.

“எத்தனை நாள் அவகாசம் தேவைப்படும்” என்று நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு, “இது இரு நாடுகளிடையேயான விவகாரம் என்பதால் இதுதொடர்பாக உரிய விளக்கம் பெற வேண்டும். இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜீய உறவு குறித்த விவகாரம் ஆகும். இதில் ரிட் மனுக்கள் மூலமாக விசாரிக்க முடியாது.” என்று தெரிவித்தது.

இதையடுத்து, மனுதாரர் கே.கே.ரமேஷ் தரப்பு, “இதுபோன்ற ஒரு பதில் மிகவும் வேதனை அளிக்கிறது. மீனவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இலங்கைச் சிறையில் வாடுகின்றனர்” என்று தெரிவித்தது.

பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

வழக்கை அக்டோபர் 14க்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம்.

தமிழக மீனவர்களின் பிரச்சனையை களைய மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட துயரங்களை அனுபவிப்பார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.