டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், அதன் பலன் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.








