ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்தவரை கடந்த வருடம் பரம்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஆண்டு நடைபெறும் தொல்லியல் அகழாய்வு பணி முழுக்க முழுக்க வாழ்விடப்பகுதிகளை கண்டறியும் நோக்கத்திற்காகவே நடைபெற்று வருகிறது. இந்த தொல்லியல் அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தொடங்கி தொடர்ந்து 4 மாத காலமாக நடைபெற்று வருகிறது.
இதில், 30க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து மேலும் 20 குழிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், இரும்பு பொருட்கள் கிடைத்துள்ளதால், தொடர்ந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







